மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது.
இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.
" அம்... மா... "
வேதனையில் முனகினாள் அமுதா.
" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "
ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.