செவ்வாய், 16 ஜூன், 2015

வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)


மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015  போட்டி முடிவுகள் 
    கடந்த ஏப்ரல் மாதம் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட இந்த போட்டியானது கடந்த மே மாதம் 20ம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது. மொத்தமாக இருபத்தைந்து கவிஞர்களிடமிருந்து இருபத்தேழு பாடல்கள் போட்டியிட்டன. நான்கு இரகசிய நடுவர்கள் பாடல்களுக்கு புள்ளிகளை இட்டனர். அவர்கள் புள்ளிகளை நிரல்படுத்துவதட்கு அவர்கள் புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்து அவர்கள் தந்த முதலாவது அதி கூடிய புள்ளிக்கு என்னால் 30 புள்ளிகளும் தொடர்ந்து 29, 28, 27... என புள்ளிகள் மீள வழங்கப்பட்டது. நடுவர்களுக்கு பாடல் இலக்கம் ஒன்று முதல் இருபத்தேழு வரை இலக்கமிடப்பட்டே அனுப்பப்பட்டன. இதனால் நடுவர்களுக்கு யார் கவிஞர்கள் என்ற விபரம் இதுவரை தெரியாது.

புதன், 22 ஏப்ரல், 2015

வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”


மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 

இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரியரை இனம் காண்பதற்கான ஒரு முயற்சி. இந்தப் போட்டியானது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நடாத்தப்பட்டு, இரகசிய நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதிக சராசரிப் புள்ளி பெறுகின்றவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, அவர் எழுதும் பாடல், தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய திரைப் படத்தில் இடம்பெறும். அத்தோடு அவருக்கு பிரபல திரைக் கவிஞர்களான திரு பா.விஜய், திரு சினேகன் ஆகியோர் கையொப்பமிட்ட வாழ்த்துச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்.

புதன், 1 ஏப்ரல், 2015

ஹைக்கூக்கள் 34





தொலைத்த கேள்விகளுக்கான தேடல் 
கையிலிருக்கின்றன பதில்கள் 
வாழ்க்கை 




மீண்டும் விரைவில் தேர்தல் வரட்டும் 
போஸ்டர் ஒட்டி பிழைக்கலாம் 
ஏழை கூலி தொழிலாளி 



உன் அன்பும்
சுகமாய் இனி(ணை)க்கின்றது 
நீ என் தம்பி.. 



இன்றும் கடின உழைப்பு, 
ஓய்வு நாளாம் மே தினம்
முதலாளிகளுக்கு 



கால தேவனின் 
பருவ கண்ணாடிகள் 
பெண்மைப் பூக்கள் 



கவிழ்ந்த மதுக்கோப்பையில்
வழிந்து சொட்டிக்கொண்டிருக்கின்றது 
உன் நினைவுகள் 



குப்பை கிண்டுவது
கோழியின் குணம் 
கிளறப்படுகின்றனர் தமிழர் 



பெருவெடிப்பினால் பிரசவம்
தவழும் குழந்தைகள் 
கவிதைகள் 



முட்கம்பி சிறைகளில் சமாதானம்
உலகெங்கும் திறப்படுகின்றன 
அகதி முகாம்கள் 



அடி பட்டாலும் 
திருந்தி கொள்ள விரும்பவில்லை 
உன் மீதான காதல் 

வல்வையூரான்.

வியாழன், 12 மார்ச், 2015

தாழ்ந்து நிற்கும் தரணி


வேரில் வைத்திருந்த உயிர்ப்பை
வேள்வி முடித்து நிமிர்ந்த முனிபோல்
வெய்யில் கண்டதும் வேகமாக
வெளித்தள்ளி முளைத்தன தளிர்கள்

அத்தனையும் சுள்ளிகளாய் மட்டுமாகி
அனைத்தையும் உதிர்த்துக் கொட்டி
பொட்டிழந்த விதவையாகி நின்றவை
சிங்காரித்து சிரித்தன பருவப் பெண்ணாய்

நிலம் பிளந்து
நீர் மதர்ப்பு உறிஞ்சி
மலர் முகம் காட்டின
மகிழ்வாய் சூரியனுக்கு

சோதனையும் சோகமும் கொண்டு
ஓரோரிலையாய் உதிர்த்து
சோபையை இழந்து
சோகத்தில் இருந்தவை துளிர்க்கின்றன

கடும்பனி குளிரை
கணக்கில் எடுக்காது
அதனுள் அமிழ்ந்தவை
கர்வத்தோடு முழிக்கின்றன

வசந்தகாலம் வந்தது
வளங்கள் தந்தது
வாசலுக்கு வருகின்றன மலர்கள்
வசந்தத்தின் வாசனை தரவே

ஆண்டுக்கொரு முறை
அழுது தன்னை இழந்தாலும்
மீண்டு சிரிக்கின்றன
வித்தக தன்மை கொண்ட மரங்கள்

வீழ்ந்தவர் நாங்கள்
விலைகள் பல கொடுத்தவர் நாங்கள்
வாழ்ந்தவர் நாங்கள் மாண்டு
மகிழ்வதை நிரந்தரமாகத் தொலைப்பதா

மனம் மக்கி இருக்காதே தமிழா
வசந்தகாலம் உனக்கும் கூட உண்டு
வேதனைகளை முட்டித்தள்ளி எறிந்து எழு
தாழ்ந்து நிற்கும் தரணி உனக்குக் கீழ்...

வல்வையூரான்.