இவ்வண்ணம் கலாநிதி அப்துல்கலாம் சொன்னாராம்.
இனிப்பாய் இலட்சியமாய் கனவுகள் காண
இலட்சியத்தின் கனவுகள் எங்களுக்கும் இருக்குது.
நீண்ட மூச்சு உள் இழுத்து
நிம்மதியாய் வெளியே விட்டு
ஆழ்ந்த தூக்கம் போட
அலையாய் அலைகின்றது மனம்
அதிகாலையிலேயே எழுந்து
அரக்க பரக்க தயாராகி
அங்கொரு வேலை இங்கொரு வேலையென்று
ஆவி உருக்கி வேலைசெய்து
பாதி சம்பளம் வரியாய்க்கட்டி
மீதி அதைப் பாதி பாதியாக்கி
சாதிசனமென்று தூக்கி ஊருக்குப்பாதி...
மீதியாய் கால் சம்பளம் கையில்
கையில் இருப்பதில் காருக்கும்,
காப்புருதிக்கும், கடனாய் வாங்கிய வீட்டுக்கும்,
கணக்கில்லாமல் பெருகிய கழகங்கள் சங்கங்களுக்கும்,
கடனட்டைக்கும் கட்டியது போக கடனே கையில் மிஞ்சுது.
கடனை கஷ்டத்தை நினைத்தபடி
கண்விழித்துதிருந்து காலைப்பொழுதில் கண்மூட
கலர்கலராய் கனவு வருமென்றால்
கதிகலங்க வைத்தபடி வருகுது கனவுகளும்
காது செவிடுபடும்படி வெடிகுண்டோசைகளும்,
கலகலத்து விழுந்தழியும் கட்டிடங்களும்,
கனதியான கால்சப்பாத்துகளும் கைதுகளும்,
கண்ணீரோடு காணமல் போனோரைத்தேடும் உறவுகளும்...
இளைஞராய் இயற்கையை வென்று
இலட்சியமாய் கனவு காண முடியாமல்
இயல்பான நித்திரை இழந்து
இற்றுப்போய் நொந்துபோய் வாழும் சாதாரண பிறவிகளாய்...
இலட்சியத்தின் நெருப்பு இன்னும் இருக்குது
இனிதாய் நிறு பூத்து... நிமிர்ந்தெழும்...
இன்றில்லாவிட்டாலும் வென்றிடும் தமிழ் அன்று
இயல்பாய் எங்கள் இனிய கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்.
வல்வையூரான்.
Tweet | ||||
வெளிநாட்டு வாழ்வில் விலைகொடுக்கும் வரிகள் வாட்டி எடுக்கும் கனவுகள் !கவிதை அருமை நண்பா.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகனவுகளும் உண்மை காட்சியாகும் நாள் வரும்..
பதிலளிநீக்கு