காலம் காத்தால
கிழக்கு வெளிக்க முதல்
கருக்கலில் விளக்கெடுத்து
காடுபோய் வந்து
முறிச்ச வேலங்குச்சி கொண்டு
முழுதாய் பல்லுவிளக்கி
முகச்சவரமும் தான் செய்து
முகமலம்பி நீ வர
மூடி வச்ச பானையிலிருந்த
பழஞ்சோறெடுத்து பக்குவமாய்
தயிரும்விட்டு குழைத்து
தனித்த வெங்காயம் கடிக்க வைத்து
கட்டுசோறாய் கலயத்திலிட்டு
கருவாடும் சுட்டதில் வைத்து
கட்டடங்கா ஆசையோடு
காதல் மனைவி நான் உன் கையில் தர
கட்டி நீ எனைப்பிடித்து
கன்னத்தில் உந்தன்
கருத்த அதரம் பதித்து
கைகள் கரும் கூந்தல் தழுவி விட்டகன்றாய்
விடியலில் போனவன் கடிதாய் வேலைமுடித்து
விருப்பமாய் மாலைவந்தனைவான் என்றே
மல்லிகை பூவெடுத்து மாலையாய் தொடுத்து
மன்னவனிவன் வருகைக்காய் காத்திருக்கேன்
மாலையும் ஆகி எங்கும் கருத்தும்
ஆலையும் எல்லாம் பூட்டியும்
சாலையும் எல்லாம் வெறித்துப் போயும்
சேலையில் நான் சோலை ஓரம் காத்திருக்கேன்
காதலிக்கையில் காத்திருந்தாய்
கைப்பிடித்தவுடனும் காத்திருந்தாய்
காலங்களானதால் காத்திருக்க வைத்துவிட்டாய்
கண்டவர் கூட்டுனக்கு காதலியை மறந்து போனாய்
கட்டி வச்ச மல்லிகையும்
கண்டாங்கி சேலையும் கசங்க வேணும்
காலில் இட்ட கொலுசு கலகலக்க
கரும்கூந்தல் கலைய வேணும்
பகலவனும் மறைத்து போனான்
பக்கத்து வீட்டவரும் கதவடைத்து போனார்
பகலெல்லாம் தனித்திருந்தேன்
பாசத்தில் துடித்திருக்கேன்
பாவியானாய், பரிதவிக்க விட்டாய்
பாழும் குடி பழகிக்கொண்டாய்
பாச மனைவி எனைத்தான் மறந்தாய்
பணமனைத்தையும் தான் முடித்தழித்தாய்
கண்ணாளா காதலனே
கைப்பிடித்த மன்னவனே
காலையில் விட்டகலும் நேசத்தோடு
மாலையில் நீ மீளும் நாளேது சொல்வாய்?
வல்வையூரான்
Tweet | ||||
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
குடிக்காமல் வா..மச்சான்! கொஞ்சும் பருவம்
படிக்காமல் ஆகுதே பாழ்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
கவிதையின் வரிகள் மனதை விட்டு அகலவில்லை மிகஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-