சனி, 29 டிசம்பர், 2012

வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்


மழை பெய்தது 
வயல் நிறைந்தது
உயர்த்தி கட்டிய வரப்பில்
நிறைந்து வந்தது வெள்ளம்
நிறைந்ததால் நிமிர்ந்தது 
நிறை குலை தள்ளிய 
நிறைந்த நெற்கதிர்
விளைந்தது விண்ணுயர்ந்து
விளைவித்தவன் விவசாயி

உழுது மறுத்துளுது
உயர் விதை தேடி
உண்மை உழைப்பை 
குருதியை உருக்கி
வியர்வையாய் கொட்டி
வான் பார்த்த பூமியில்
தான் பார்த்து ஆய்ந்து
நாற்று நடவு நட்டு
அங்கெ இங்கே 
கடன வாங்கி

அதிகமும் இல்லாமல் 
குறைச்சலும் இல்லாமல்
அளவாய் வரப்பு வெட்டி 

அன்பான குழந்தைக்கு 
பால் புகட்டுவது போல்
நன்றாய் நீர் விட்டு

அந்த மருந்து
இந்த உரம் என்று
இன்னும் கடன் வாங்கி
உழைப்பை போட்டு குழைத்து
உயர்த்திய நெற்கதிர் இது

விளைந்த நெற்கதிரை
விரைந்து அறுத்து
போரடுக்கி சூடடித்து
சாக்குகோனி விலைக்கு வாங்கி
சம்பளம் குடுத்து 
சாக்கு தைத்து எடுத்து
விற்பனைக்கு போனால்
விலை அங்கே கிடைக்காது

விற்றுவிடவே வேண்டும்
விவசாயிக்கு கடன்
தொண்டை அடைக்க நிக்குது
விற்றபின் வீடு திரும்பமுன்
வேண்டியது எல்லாம் 
வாங்க முடியாமல்
வேண்டிய கடனை மட்டும்
வினயமாய் அடைத்து
வீடு சேர்கையில் வீட்டில்
நித்திய பிலாக்கணம் தான்

வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்
வேதனையோடு விவசாயி.


வல்வையூரான்.




Post Comment

4 கருத்துகள்:

  1. நல்ல கவிதை.அன்பாக குழந்தைக்கு பால் புகட்டுவது போல் ம்ம்ம்ம் ஒவ்வொரு விபசாயிக்கும் ஒவ்வொரு பயிரும் குழந்தைதான்.

    பதிலளிநீக்கு
  2. விவசாயிகளின் வாழ்வு எப்போதும் இப்படித்தான்...:(
    வரப்புயர நீருயரும்
    நீருயர நெல் உயரும்
    நெல் உயரக் குடி உயரும்
    குடியுயரக் கோன் உயர்வான்
    என்னும் ஔவையார் பாட்டு அவர் காலத்துக்கு மட்டும்தான் பொருத்தம் போல்...

    பதிலளிநீக்கு
  3. விவசாயியின் வாழ்வு இன்று
    மிகப்பெரும் கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது
    இயற்கையும் அரசும்....
    இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பமும்
    விளைச்சலுக்கான நேரடி விற்பனை இல்லாது
    இடையில் இடைத்தரகர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும்...
    ஏழ்மையை காரணம் காட்டி விளைநிலத்தை
    மனைநிலமாக மாற்ற மற்றொரு தரகர்களின் தொந்தரவும்...
    இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் விவசாயியை தங்களின்
    தரம் தாழ்த்தி நிலைமையை மோசமாக ஆக்கிகொண்டிருக்கிறது...
    காலப்போக்கில் சோற்றில் கைவைக்க முடியாது போகும்...
    இன்று இவர்கள் சேற்றில் இறங்கவில்லை என்றால்...
    கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்...

    விவசாயி நல காப்போம்...

    அழகான கவிதை சகோதரரே...
    விவசாயியின் நிலைமையையும் அவர்தம் உழைப்பையும்
    விளைச்சலுக்காகவும் அதுதரும் பலனுக்காகவும் எவ்வளவு நாட்கள்
    அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதையும்
    மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.